Monday, December 20, 2010

கூட்டமாகவே நகர்கிறோம்

கூட்டமாகவே நகர்கிறோம்
சாலையில்
பயில்வதில்
அலுவலில்
சமூகத்தில்
சிந்திப்பதில்
தலையும் காலும் கட்டப்பட்டு
புல்மேயும் ஆட்டைப் போல.

கூட்டமாய் நகர்தல் எளிதானது.
முன்னே பார்த்தல் மட்டும் போதுமானது.

முடிவில்லா நேர்க்கோடாகவும்
இணைகோடுகள் கொண்டதாகவும்
ஆங்காங்கே தனித்தியங்கும் புள்ளிகளையும் கொண்டதளமிது.
கோடுகள் இயல்பானதாயும்
புள்ளிகள் அயலானதாயும் எண்ணப்படுகிறது.

வரையறுக்கப்பட்ட பயணங்கள்
பாதை நெடுக
மின்கம்பிச் சுவர்களுடன்.
விலகுதல்தோறும் நிலைகுலையச்செய்கிறது.

புதியன பற்றிய கற்பனைகள்
பயத்தைத் தருவதாகவும்
நேர்தலின் விதிகள் மீறப்படுவதாகவும்
அச்சம் கற்பிக்கப்படுகிறது.

எல்லோருக்கும் இழிவெனும்பொழுது
இழிவென்பது இயல்பாகிறது.
இயல்பின் வரையறை புதுப்பிக்கப்படுகிறது.

நெருக்கப்படுகையில்
எதிர்ப்புறம் இடமிருக்க மகிழ்கிறது.
இல்லையெனில்,
சாதல் இயல்பென்று மரிக்கிறது.

செத்தொழியட்டும்

நன்றி : உயிரோசை

No comments:

Post a Comment